Wednesday, April 21, 2010

கிராமத்தில் பிறந்தவன் 7 மாதத்திலா பிறந்தான்?: பாமக எம்எல்ஏ

சென்னை: தனியார் மருத்துவமனைகள் கோடிகளை குவிப்பதற்கு உதவும் திட்டமாக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மாறிவிடக் கூடாது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

சட்டசபையில் மக்கள் நல்வாழ்த்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ டாக்டர் காயத்ரி தேவி கூறுகையில்,

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சைக்கு செல்பவர்களிடம் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்களின் பரிந்துரை கடிதம் கேட்கிறார்கள். அதனால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாதாரண வியாதிகளுக்கும் அசாதாரண கட்டணம்:

இந்த திட்டத்தில் சில தனியார் மருத்துவமனைகளில் சாதாரண வியாதிகளுக்கும் அசாதாரணமான கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். இதற்கு ஒரு கண்காணிப்பு குழுவை அமைத்து எந்தெந்த மருத்துவமனைகள், எந்தெந்த வியாதிகளுக்கு எவ்வகை கட்டணம் பெறுகின்றன என்பதை கண்காணிக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள் கோடிகளை குவிப்பதற்கு உதவும் திட்டமாக கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மாறிவிடக் கூடாது.

இத்திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் பல தனியார் மருத்துவமனைகளில் முறையாக பயிற்சி பெறாத டாக்டர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், உதவியாளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற குறைகளைக் களைய வேண்டும்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூ. 1 லட்சம் வழங்கப்படுகிறது. சிகிச்சைக்கான செலவு ரூ. 1.50 லட்சம் வந்தால், மீதமுள்ள ரூ. 50,000த்தை செலுத்த பலர் தயாராக உள்ளனர். ஆனால், இதுபோன்ற நிலை ஏற்படும்போது தகுதியில்லை என்று கூறி மருத்துவமனைகள் திருப்பி அனுப்பி விடுகின்றன.

பரிசோதனை செய்வதில் ஏற்படும் காலதாமதம், சுகாதாரக் குறைபாடுகள் காரணமாக அரசு மருத்துவமனைகளுக்கு பலர் செல்வதில்லை.

மக்கள் எப்படி வருவார்கள்?:

சென்னை அரசு பொதுமருத்துவமனையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட எலக்ட்ரானிக் மைக்ராஸ்கோப் கருவி பழுதுதடைந்துள்ளது. இதுபோன்ற நிலை இருந்தால் அரசு மருத்துவமனைக்கு மக்கள் எப்படி வருவார்கள்?.

எனவே அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனை ஒன்றை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் 62,000 செவிலியர்கள் தேவை. ஆனால் 20,000 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். எனவே மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும், செவிலியர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்றும் புரியாத மருத்துவ படிப்புகள்:

மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு தொடர்பில்லாத மருத்துவ உதவியாளர் பயிற்சியை (பிசிஸியன் அசிஸ்டெண்ட் கோர்ஸ்) சில தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடத்துகிறார்கள். அதேபோல மருத்துவ கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கி வரும் 6 மாத உதவி செவிலியர் பயிற்சியின் நோக்கம் தான் என்ன? நாடித் துடிப்பை பற்றி அறிந்து கொள்ளக் கூட இந்த 6 மாதம் போதாதே? ஏன் இந்த பயிற்சி இதுபோன்ற ஒன்றும் புரியாத பாடப்பிரிவுகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

பெங்களூரை நம்பியிருப்பது ஏன்?:

திசு சோதனை, நரம்பு நுண் சோதனை போன்ற அதிமுக்கியமான சோதனைகளுக்கு பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மருத்துவமனையை நம்பியிருப்பது ஏன்?. நிமான்சுக்கு இணையாக ஒரு ஆராய்ச்சி நிலையத்தை தமிழகத்தில் இந்திரா காந்தி பெயரில் உருவாக்க வேண்டும்.

தனியார் செவிலியர் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் `சூப்பர் ஸ்பெஷாலிட்டி கேசஸ்' பயிற்சி பெற அனுமதி மறுப்பது ஏன்? அதேபோல தனியார் ஆஸ்பத்திரிகளில் பயிற்சி பெற செவிலியர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்க மறுப்பது வேதனைக்குரியதாகும் என்றார் காயத்ரி தேவி.

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் சிகிச்சையா?:

அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் பேசுகையில், தண்ணீரில் கலப்படம், உணவில் கலப்படம், இப்போது மருந்திலும் கலப்படம் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. சுகாதாரத் துறையின் நிர்வாக திறமையின்மையே இதற்கு காரணம். இந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

(கலைஞர்) காப்பீட்டுத் திட்டமும் சட்டமன்ற கட்டிடம் போல அவசரக் கோலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. எத்தனையோ அரசு காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கும் போது தனியார் நிறுவனத்திற்கு கொடுத்திருப்பது ஒரு சிலர் ஆதாயம் பெறுவதற்காகத் தான்.

71,942 பேருக்கு ரூ.205 கோடியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், 1.44 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களுக்காக கொடுத்த பிரீமியத் தொகை எவ்வளவு என்பதை மட்டும் ஏன் சொல்லவில்லை?.

காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்தில் 4 நபர்களுக்கு 4 வருடங்களுக்கு ஒரு முறை காப்பீடு செய்யப்படுகிறது. இதில் 4 வருடங்களில் ஒரு நபர் ரூ.1 லட்சத்துக்கு சிகிச்சை மேற்கொண்டுவிட்டால் மற்ற 3 பேருக்கு திட்ட பலன் கிடைக்காது. அந்த 3 பேர் கதி என்ன?.

இடையில் ஒரு புரோக்கர் ஏன்?:

அதேபோல ஆபரேஷனுக்கு முந்தைய பரிசோதனை, தங்கியிருக்கும் செலவு, தொடர் சிகிச்சை ஆகியவைகளை செலுத்த முடியாமல் பலர் அவதிப்படுகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் ஆபரேஷன்களுக்கும் இந்த காப்பீட்டுப் பணம் வழங்கப்படுகிறது. அரசு பணத்தை அரசு மருத்துவமனைக்கு வழங்க இடையில் ஏன் ஒரு புரோக்கர்? என்றார்.

கிராமத்தில் பிறந்தவன் 7 மாதத்திலா பிறந்தான்?:

பாமக எம்எல்ஏ டாக்டர் நெடுஞ்செழியன் பேசுகையில், கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்காக `பேச்சலர் ஆப் ரூரல் மெடிசின் சர்வீஸ்' (பி.ஆர்.எம்.எஸ்.) என்ற மூன்றரை வருட படிப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

கிராமத்தில் பிறந்தவன் மட்டும் 7 மாதத்திலா பிறந்தான்?. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்

Monday, April 19, 2010

தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே.......?

மதுரை: தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை!. திராவிடத்தைக் கருவருக்காமல் தமிழ்த் தேசியம் இம் மண்ணில் கருக் கொள்ளாது என்று தமிழர் களம் அமைப்பாளர் அரிமாவளவன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கன்னடன் கன்னடனாக இருக்கும் போது, தெலுங்கன் தெலுங்கனாக இருக்கும் போது, மலையாளி மலையாளியாக இருக்கும் போது தமிழன் மட்டும் ஏன் திராவிடனாகத் திரிக்கப்பட வேண்டும் ?

முல்லைப் பெரியாறும், ஒகனேக்கல்லும், காவிரியும், பாலாறும் தமிழகத்திற்குக் கிடைக்காமல் முடக்கப்படும்போது, தமிழ்நாட்டின் வளங்கள் மட்டும் அவர்களுக்கு வேண்டுமா? இதுதான் இந்திய இறையாண்மையின் இலக்கணமா? அல்லது இந்தியக் கட்டப் பஞ்சாயத்தில் கிடைக்கும் ஞாயமா?

கடந்த 1956 ல் மொழி வழி மாநிலமாக இந்தியா பிரிக்கப்படும்போது மொழி இன அடிப்படையிலான உரிமைகளுக்கு அது அங்கீகாரம் அளித்தது!

ஆனால், மராட்டிய இன உணர்வுகளும், சீக்கிய இன உணர்வுகளும், கன்னடத், தெலுங்கு, மலையாள மற்றும் பிற இன உணர்வுகளும் உரிமைகளும் இந்தியத் துணைக்கண்டத்தில் மதிக்கப்படும்போது தமிழர்களின் உரிமையும் தாகமும் மட்டும் நசுக்கப்படுவது ஏன்?

அந்தந்த மாநிலங்களை அவரவர் ஆளும்போது, தமிழ்நாடு மட்டும் திறந்த வீடாகவும் வேலியில்லாக் காடாகவும் யார் வேண்டுமானாலும் ஆளலாம், ஆட்டம் போடலாம், ஏறி மேயலாம் என்ற நிலை இருப்பது ஏன்?

வந்தேறிகள் ஆளவும் ஏய்க்கவும அரட்டவும் உருட்டவும் அவர்கள் வைத்திருக்கிற கைத்தடிதான் திராவிடம் என்கிற பொய்ப்பூச்சு!

அடுத்து, பெரியார் என்கிற ஊதிப் பெரிதாக்கி வைத்திருக்கிற பேருரு!

தமிழர்கள் ஏய்க்கப்படுவதும், ஏமாற்றப்படுவதும், நசுக்கப்படுவதும், கொல்லப்படுவதும் காலாகாலமாக நடந்து வருகின்ற ஒன்றுதான். தாக்கினால் திருப்பி அடிப்பார்கள் என்கிற நிலை இருக்கும் போது தான் உலகில் அமைதி நிலவுகிறது. அல்லது ஏறி மேய்கிறார்கள்!

மலேசியாவிலோ, பர்மாவிலோ, ஈழத்திலோ, கர்நாடகத்திலோ தமிழர்கள் தாக்கப்பட்டால் தாய்த் தமிழகம் கொதித்து எழும் என்கிற நிலை இருந்தால் பத்தரைக் கோடித் தமிழனைத் தொட எந்தக் கொம்பனுக்கும் உலகில் துணிவிருந்திருக்காது.

மாறாக, பர்மாவின் சயாம் நகரில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோதோ, கர்நாடகத்தில் தமிழர்கள் வெட்டித் துண்டாடப்பட்டபோதோ, மும்பையிலும் மணிப்பூரிலும் தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டபோதோ, பர்மாவிலிருந்து தமிழர் விரட்டப்பட்டபோதோ, ஈழத்தில் 3 லட்சம் தமிழர்கள் கொடுமையாகக் கொன்றொழிக்கப்பட்டபோதோ தாய்த் தமிழகத்தில் எதிர்ப்பில்லை, கொதிப்பில்லை, கொந்தளிப்பில்லை! காரணம் என்ன? திராவிடம் என்ற நச்சு போதைபோல் ஏறி சித்தம் சிதைந்து கிடக்கிறான் தமிழன்!

ஈயும், எறும்பும், புழுவும், பூச்சியும் நசுக்கப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
காகம் ஒன்று கொல்லப்பட்டால் வானத்தையே கருப்பாக்கி காகக்கூட்டம் கரைகிறது!

ஒரு தெரு நாயைத் தாக்கினாலும் ஊர் நாய்களே ஒன்று சேர்ந்து மாந்தக் கூட்டத்தை வறுத்தெடுக்கிறது!

இரு சீக்கியர்கள் தாக்கப்பட்டதற்காக பஞ்சாப் பற்றி எரிகிறது.
மராத்தியன் பீகாரில் தாக்கப்பட்டால் பதிலடியில் நாடு எரிகிறது!
பீகாரியைத் தொட்டால் வடநாடு கொதிக்கிறது!

இரு இசுரேலியர்களை பாலத்தீனர்கள் சிறைப்பிடித்ததற்காக இரு பாலத்தீனிய நகரங்களை தடைமட்டமாக்கி இசுரேல் பாடம் கற்பித்தது! உலகமே இப்படி இருக்கும்போது, அது இனப்பற்றாக, இனப்பாதுகாப்பாகப் பார்க்கப்படும்போது தமிழர்நாடு மட்டும் விதிவிலக்காக இருப்பது ஏன்?


மூத்த இனம் இங்கே முடங்கிக் கிடப்பதே தன் அடையாளத்தை இழந்ததால்தான்! தமிழனைத் திராவிடனாக திரித்து சிதைத்துவிட்டார்கள்.

மீண்டும் இழந்த தமிழன் என்கிற அந்த அடையாளத்தை நாம் உணர்ந்து தக்க வைத்தால் மட்டுமே எதிர்காலத் தலைமுறையை நாம் பாதுகாக்க இயலும். இதில் சமரசம் செய்து கொண்டு அரசியல் களத்தில் ஆராவாரம் செய்து யார் களம் இறங்கினாலும் அவர் தமிழினத்தின் இரண்டகராகவோ, எதிரியாகவோத்தான் இருப்பர்.

தமிழகத்தைச் சீரழித்தது திராவிடமே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை! திராவிடத்தைக் கருவருக்காமல் தமிழ்த் தேசியம் இம் மண்ணில் கருக் கொள்ளாது என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.